தமிழ்த்தாய் வாழ்த்து குறுந்தகடுகளில் ஒலிக்க தடைவிதிக்கப்படுமா?

தென்காசி,நவ.10: அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை குறுந்தகடுகளில் இசைக்க தடைவிதித்து,மாறாக அனைவரும் பாடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் விரும்புகின்றன
Updated on
1 min read

தென்காசி,நவ.10: அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை குறுந்தகடுகளில் இசைக்க தடைவிதித்து,மாறாக அனைவரும் பாடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

  தமிழகத்தில் அனைத்து அரசு விழாக்கள் மட்டுமன்றி, எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், பள்ளிகளிலும் கூட தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர்தான் நிகழ்ச்சிகள் தொடங்கும்.

தமிழ்த்தாய் வாழ்த்தாக மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்' என்ற பாடல் பாடப்பட்டு வருகிறது.

  தற்போது அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலானாலும், நாட்டுப் பண்ணாக இருந்தாலும் இவையனைத்தும் குறுந்தகடுகள் (சிடி) மூலமாகத்தான் இசைக்கப்படுகின்றன.

 அதை இயக்குபவர்கள் பெரும்பாலாலும் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், நாட்டுப் பண்ணிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

  தமிழக அரசு தமிழை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அண்மையில் செம்மொழி மாநாடு அரசு சார்பில் நடத்தப்பட்டது. அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

  தமிழில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற சலுகைகளும் கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு எழுதப்பட்டும் வருகிறது.

  ஆனால், அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் நிகழ்ச்சிநிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து என்றவுடன் அனைவரும் எழுந்து கையை கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

மைக் செட் அமைத்திருப்பவர் குறுந்தகட்டை ரிமோட் மூலமாக ஆன் செய்து தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்கச் செய்கிறார்.

இது தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

  அண்மையில் திருநெல்வேலி மாவட்டம்,தென்காசி,கடையநல்லூர் மற்றும் செங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து என கூறியவுடன் அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது நாட்டுப்பண் ஒலிக்கத் துவங்கியது.

இதுபோன்று ஒருமுறையல்ல, பலமுறை மாறிமாறி நாட்டுப்பண் ஒலிக்கப்பட்டு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. காரணம், குறுந்தகடு எதுவென்று தெரியாமல் மைக் செட் அமைப்பாளர் பயன்படுத்தியதுதான்.

  தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக தெரியாதவர்களும் உள்ளனர். இதற்கு மாறாக தமிழ்த்தாய்வாழ்த்து அல்லது நாட்டுப்பண் ஆகியவற்றை குறுந்தகட்டின் மூலம் ஒலிக்காமல் கட்டாயமாக அனைவரும் பாடினால் நன்றாக இருக்கும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் விருப்பமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com