சங்கரன்கோவில், டிச. 4: சங்கரன்கோவில் அருகே ஆலயப் பிரச்னை தொடர்பாக வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சேர்ந்தமரம் அருகேயுள்ள திருமலாபுரம் மலையில் லூர்து அன்னை தேவாலயம் உள்ளது. இம் மலையின் கீழ் பசுபதேஸ்வரர் குடைவரைக் கோயில் உள்ளது. இவை திருவனந்தபுரம் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த தேவாலயத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 9.11.09 முதல் 8.11.10 வரை தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகம் அனுமதியளித்திருந்தது.
ஓராண்டு முடிந்த பின்னரும் பணிகள் மேற்கொண்டதால் பசுபதேஸ்வரர் கோயிலில் வழிபடும் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இது தொடர்பான சமாதானக் கூட்டம் சங்கரன்கோவில் வட்டாட்சியர் சந்திரசேகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவனந்தபுரம் தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகத்தின் பராமரிப்பு உதவிஅலுவலர் கலைச்செல்வன், துணை வட்டாட்சியர் முருகையா, சேர்ந்தமரம் காவல் ஆய்வாளர் பால்பாண்டி, ஊராட்சித் தலைவர் செண்பகராணி மற்றும் இருதரப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திருவனந்தபுரம் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலர் மற்றும் ஆணையரை சந்தித்து இருதரப்பினரும் தீர்வு காணவேண்டும். அதுவரை உள்ளதை உள்ளபடியே பராமரித்து இருதரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.