நாகர்கோவில், அக். 10: கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யும் பொருட்டு நபார்டு திட்டத்தின்கீழ் 5 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் என். சுரேஷ்ராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரல்வாய்மொழி, அம்மாண்டிவிளை, இரணியல், காட்டாத்துறை, மார்த்தாண்டம், பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், பெருவிளை அரசு உயர்நிலைப்பள்ளி, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, சூரன்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, வேம்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டிட இந்த நிதி செலவு செய்யப்படும்.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணிகள்
ஆரம்பிக்கப்படும் என்றார் அவர்.