"ஆர்ப்பாட்டக் களமாக' மாறிவரும் ஆட்சியர் அலுவலகம்!

திருநெல்வேலி, ஜூன் 21: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடையை மீறி நடைபெறும் ஆர்ப்பாட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிர
Updated on
2 min read

திருநெல்வேலி, ஜூன் 21: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தடையை மீறி நடைபெறும் ஆர்ப்பாட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி சந்திப்புப் பகுதியிலிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பாளையங்கோட்டை பகுதியிலிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் செல்வோர் வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உத்தரவு இருந்து வரும் நிலையில், சிலர் தடையை மீறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். போலீஸôர் முன்னிலையில் இப் போராட்டங்கள் நடைபெறுவதுதான் வேடிக்கை.

சில போராட்டங்கள் பற்றிய அறிவிப்பு முன்கூட்டியே கிடைத்த போதிலும், அவற்றை போலீஸôர் தடுக்க முயல்வதில்லை என்றும், தடையை மீறி போராட்டம் நடத்துவோரைத் தடுப்பதுமில்லை என்றும் கூறப்படுகிறது.

அண்மையில், தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவி கிருஷ்ணவேணி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கடந்த 14-ம் தேதி அப் பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் கூடியிருந்ததால் ஆட்சியர் அலுவலகத்துக்குள் யாரும் செல்ல முடியாத நிலை நீடித்தது.

இதன் பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. ரமணசரஸ்வதி பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்துச் சென்றனர். தடையை மீறி அவர்கள் போராட்டம் நடத்தியபோதிலும் போலீஸôர் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

இதேபோல, சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்ததும் 20-க்கும் மேற்பட்ட போலீஸôர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

எனினும், போராட்டத்தில் ஈடுபட வந்தோர் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் சுற்றிவந்ததால் அவர்களைத் தடுக்க முடியாமல் போலீஸôர் தவித்தனர். இதையடுத்து, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் சென்று போராட்டத்தில் ஈடுபட வந்தோரை அழைத்துப் பேசினார்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவரது முன்னிலையிலேயே தடையை மீறி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களைக் கலைந்து செல்லும்படி காவல் ஆய்வாளர் கூறினார்.

எவ்விதப் போராட்டமும் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீஸôர் முன்னிலையிலேயே பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவது ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவோரை முகம் சுழிக்கச் செய்கிறது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்துவோர் மீதும், போராட்டத்தில் ஈடுபட மாணவர்களை அழைத்து வருவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முந்தைய ஆட்சியர் மு. ஜெயராமன் எச்சரித்திருந்தார். ஆனாலும், போராட்டங்கள் குறைந்தபாடில்லை.

ஆட்சியர் அலுவலத்தைப் பொறுத்தவரை ஒரு நுழைவு வாயில் என்றில்லாமல் 7 வாயில்கள் உள்ளன. இதில், ஏதேனும் ஒரு வழியைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் நுழைந்துவிடுகின்றனர். ஆங்காங்கே கலைந்து நிற்கும் அவர்கள் போலீஸôரை திசை திருப்பிவிட்டு, திடீரென ஓரிடத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவதால் தடுக்க முடிவதில்லை என போலீஸôர் விளக்கம் அளிக்கின்றனர்.

அமைதியாக பணிகள் நடைபெற வேண்டிய ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களின் வேண்டுகோள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com