திருநெல்வேலி, அக். 27: திருநெல்வேலி- மதுரை இடையேயான ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் பணிகளை முடிக்க ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான ரயில் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்களை இயக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
முதல்கட்டமாக சென்னையில் இருந்து விழுப்புரம் வரை ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம்- திருச்சி இடையே 127 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கும் பணி தொடங்கியது.
நீண்ட நாள்கள் நடைபெற்ற பணிகள் கடந்தாண்டு முடிவடைந்தது. இதையடுத்து, தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் முக்கிய ரயில்கள் திருச்சி வரை டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டன. பின்னர், திருச்சியில் இருந்து மின்சார என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டன.
இதையடுத்து, திருச்சி- திண்டுக்கல் இடையே 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு இந்தப் பணியும் முடிவடைந்து இப்போது மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் நெல்லை விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில் மற்றும் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை, பாண்டியன் ஆகிய விரைவு ரயில்கள் திண்டுக்கல் வரையும், அனந்தபுரி விரைவு ரயில் திருச்சி வரையும் டீசல் என்ஜினில் இயக்கப்பட்டு, அங்கிருந்து மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.
இந்த மின்மயமாக்கல் பணி காரணமாக திருநெல்வேலி- சென்னை இடையே ஏறத்தாழ 45 நிமிஷங்கள் பயண நேரம் குறைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை- திண்டுக்கல் இடையேயும், திருநெல்வேலி- மதுரை இடையேயும் மின்மயமாக்கல் பணியை விரைந்து முடிக்குமாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து கூடல் நகர் வரை மின்மயமாக்கல் பணி முடிவடைந்து சரக்கு ரயில்கள் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பணிகள் எஞ்சியுள்ளன.
மேலும், திருப்பரங்குன்றத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி வரை ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
இதேபோல, வாஞ்சி மணியாச்சியில் இருத்து தூத்துக்குடி செல்லும் ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஓரிரு மாதங்களில் இந்த பணிகள் முடிய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வாஞ்சி மணியாச்சியில் இருந்து திருநெல்வேலி தாழையூத்து ரயில் நிலையம் வரை மின்மயமாக்கல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மதுரை- திருப்பரங்குன்றம், தாழையூத்து- திருநெல்வேலி சந்திப்பு ஆகிய பகுதிகள் இடையே மின்மயமாக்கல் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தண்டவாளத்தில் இருபுறங்களிலும் மின்சார கம்பிகளை கொண்டுச் செல்லும் தூண்கள் அமைக்கப்பட்டுவிட்டன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட அதிகாரி ஒருவர் கூறியது:
'திருநெல்வேலி- மதுரை இடையே மின்மயமாக்கல் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மின்சார ரயில் என்ஜினை இயக்க தேவையான மின்சாரத்தை பெற தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
துணை மின் நிலையப் பணிகள் முற்றிலும் முடிந்த பிறகே விண்ணப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
திருநெல்வேலி- மதுரை இடையே மின்மயமாக்கல் பணிகள் முடிந்தால் திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் பயண நேரத்தில் ஏறத்தாழ ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது'என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.