தூத்துக்குடி, செப்.6: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் திருமண உதவிக்காக செயல்படுத்தப்படும் மங்கள மாலை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாய்,தந்தை இருவரும் இல்லாத ஆதரவற்ற 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு நல்ல மணவாழ்க்கை அமைத்து கொடுக்கும் வகையில் சிறந்த மணமக்களை தேர்ந்தெடுத்து திருமணம் நடத்திடும் பொருட்டு மங்கள மாலைத் திட்டம் என்ற திட்டத்தை அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி ஆதரவற்ற பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய குறிப்பை, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அதற்கான படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமகன்களும் நேரடியாக படிவத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்யலாம்.
மணமகளின் விருப்பத்துக்கு ஏற்றாற் போன்று அமையப்பெறும் மணமகன் குறித்த அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் இருதரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டு இருவருக்கும் வசதியான ஒரு நாளில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு திருமண பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் நடைபெறும் திருமணங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அன்னைதெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் தாலிக்கு 4 கிராம் தங்கம் மற்றும் மணமகளின் கல்வித் தகுதிக்கு ஏற்றாற் போன்று ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
எனவே, ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்த மேலும் விவரம் அறிய விரும்புவோர் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், 5-ஏ, டூவிபுரம் 11-வது தெரு, தூத்துக்குடி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.