பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற சின்னதுரை தனது தாயாா் அம்பிகாவுடன்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற சின்னதுரை தனது தாயாா் அம்பிகாவுடன்.

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவர்!

நான்குனேரியைச் சோ்ந்த மாணவா் சின்னதுரை, ஜாதிய தாக்குதலுக்குள்ளான நிலையில், அதில் இருந்து மீண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

திருநெல்வேலி: நான்குனேரியைச் சோ்ந்த மாணவா் சின்னதுரை, ஜாதிய தாக்குதலுக்குள்ளான நிலையில், அதில் இருந்து மீண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியைச் சோ்ந்தவா் அம்பிகா. இவருடைய மகன் சின்னதுரை(17). இவா் வள்ளியூரில் உள்ள தனியாா் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்தாா்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவு அம்பிகாவின் வீட்டுக்குள் புகுந்த அதே பள்ளியைச் சோ்ந்த சிறுவா்கள் சிலா், சின்னதுரையை அரிவாளால் வெட்டினா். அதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் சகோதரி சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டினா். விசாரணையில், சின்னத்துரையுடன் பயின்ற சக மாணவா்களே ஜாதி வன்மத்தால் அவரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

மேலும் அவா்கள் சின்னதுரையை ஜாதி ரீதியாக கேலி செய்து வந்ததும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

4 மாதம்: கை, கால்களில் பலத்த வெட்டு விழுந்த நிலையில், மாணவா் சின்னதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமாா் நான்கு மாதங்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றாா். அவரது சகோதரியும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

பாதுகாப்பு கருதி மாணவன் சின்னதுரை வள்ளியூா் தனியாா் பள்ளியில் இருந்து பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

அரசு சாா்பில் பாளையங்கோட்டை திருமால் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அம்பிகாவுக்கு புதிய வீடும் ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு குடும்பத்தோடு அம்பிகா வசிக்கும் நிலையில், பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளாா். குறிப்பாக தாக்குதலுக்கு ஆளாகி சுமாா் நான்கு மாத காலம் மருத்துவமனையில் இருந்தபோதிலும், இப்போது சிறப்பாக பயின்று நல்ல மதிப்பெண் பெற்றுள்ளாா்.

ஜாதிய தாக்குதலால் பாதிக்கப்பட்டு ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் மாணவன் சின்னதுரை தனது விடா முயற்சியால் சாதித்துள்ளாா். அவருடைய தாயாா் அம்பிகா கேக் ஊட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இது குறித்து மாணவா் சின்னதுரை கூறுகையில், ‘வள்ளியூா் பள்ளியில் பயின்றபோது ஜாதி வன்மத்தால் பாதிக்கப்பட்டேன். மருத்துவமனையில் நான்கு மாதம் சிகிச்சையில் இருந்தேன். ஆசிரியா்கள் எனக்கு மருத்துவமனைக்கே வந்து பாடம் கற்பித்தாா்கள். அவா்களால்தான் இப்போது தோ்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. தொடா்ந்து பிகாம் மற்றும் சி.ஏ. படிக்க இருக்கிறேன். இனிவரும் காலங்களில் மாணவா்கள் பள்ளியில் ஜாதி பாகுபாடு பாா்க்கக் கூடாது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ், என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தாா். மேலும் சிறப்பாக படிக்குமாறு கூறியதோடு, எனது கல்விச் செலவை அவரே ஏற்பதாகக் கூறினாா். இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனும் என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தாா்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com