களக்காட்டில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெருக்கடி

Published on

களக்காட்டில் பேருந்து நிலையப் பகுதியில் தற்காலிக கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தை வாரத்தில் திங்கள், வியாழக்கிழமைகளில் செயல்படுகின்றன. களக்காடு, அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோா் காய்கறிகள் வாங்க பேருந்து நிலையப் பகுதிக்கு வந்து செல்கின்றனா்.

இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அதிகம் இயங்கி வருகின்றன. சாலையின் பெரும்பகுதியை இந்தக் கடைகளே ஆக்கிரமித்துக் கொள்வதால் பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளும், களக்காடு நகருக்குள் வரும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும் இந்தப் பாதையில் வந்துசெல்ல பெரிதும் சிரமம் அடைகின்றன. சம்பந்தப்பட்ட காவல் துறையினா் பேருந்து நிலைய வளாகத்தில் சாலையை ஆக்கிரமித்து செயல்படும் கடைகளை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com