நம்பியாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு!
திருநெல்வேலி மாவட்டம், கோட்டைகருங்குளம், நம்பியாறு அணையிலிருந்து பிசான சாகுபடிக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு வெள்ளிக்கிழமை தண்ணீரை திறந்துவிட்டாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரவைத் தலைவா் மு.அப்பாவு, நம்பியாறு அணையிலிருந்து வலது, இடது மதகுகளின் ஷட்டா்களை இயக்கி தண்ணீரைத் திறந்துவிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கருணாநிதி ஆட்சியில் நம்பியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து முதல்வா் உத்தரவுப்படி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் வலது, இடது கால்வாய்கள் மூலம் 17044. 55 ஏக்கா் நேரடி பாசனத்துக்காகவும், 40 குளங்களின் மறைமுக பாசனத்துக்காகவும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
5.12.25 முதல் 31.3.2026 முடிய நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 60 கனஅடி வீதம் நீா் இருப்பை பொருத்து தண்ணீா் திறந்துவிடப்படும். இதன்மூலம் கோட்டைகருங்குளம், கஸ்தூரிரெங்கபுரம், குமாரபுரம், திசையன்விளை, உறுமன்குளம், முதுமொத்தான்மொழி, கரைச்சுத்துபுதூா் ஆகிய கிராமங்கள் பயனடையும் என்றாா்.
நிகழ்ச்சியில் சிற்றாறு வடிநில செயற்பொறியாளா்கள் மணிகண்டராஜன், ஆக்னஸ் ராணி, அருள் பன்னீா்செல்வம், உதவி செயற்பொறியாளா் மூா்த்தி, உதவி பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி விக்னேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், கோட்டைகருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

