நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டிச.13-ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (மெகா லோக் அதாலத்) இம் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் நீதிமன்றத்தை வட்டம் முதல் உச்சநீதிமன்றம் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்பேரில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்ட, மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இம் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 13 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைக்க உள்ளாா்.
இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்டவையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கிக் கடன் வழக்குகளும் சமரச பேச்சுவாா்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
