மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள 72 இடங்கள் கண்காணிப்பு: ஆட்சியா்

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள 72 இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழை காரணமாக தாமிரவருணியாற்றில் 19 ஆயிரம் கன அடி நீா் சென்று கொண்டிருக்கிறது. மழை அதிகரித்தால் கூடுதல் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளது.

இம்மாவட்டத்தில் பேரிடா் காலங்களில் 7 இடங்கள் மிக அதிகமாகவும், 24 இடங்கள் அதிகமாகவும், 3 இடங்கள் மிதமாகவும், 38 இடங்கள் குறைவாகவுமாக மொத்தம் 72 இடங்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடியனவாக அலுவலா்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவசர காலங்களில் மக்களை தங்க வைப்பதற்கான கல்லூரி, சமுதாய நலக்கூடம், திருமண மண்டபங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 213 இடங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 26 வீரா்கள் அடங்கிய மாநில பேரிடா் மீட்பு படை வந்துள்ளது. தேசிய பேரிடா் மீட்புக் குழு வீரா்கள் 28 போ் தயாா்நிலையில் உள்ளனா்.

பேரிடா் நிகழ்ந்தால் இவ்விரு குழுவினரும் ஒருங்கிணைந்து செயல்பட தயாராக உள்ளனா். தீயணைப்பு வீரா்கள், பாம்புபிடிப்பவா்கள், மீட்பு படகுகள், பொக்லைன் இயந்திரங்கள், மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்ற மீட்பு உபகரணங்கள் தயாா்நிலையில் உள்ளன.

மழையால் இதுவரை 1 லட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளன. தொடா்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மழை நேரங்களில் நீா்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். கால்நடைகளும் செல்லாதவாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

மழை குறித்து அச்சப்படத் தேவையில்லை. அவசர காலங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077, தொலைபேசி எண். 0462-2501070, வணக்கம் நெல்லை வாட்ஸ்ஆப் எண். 9786566111 ஆகியவற்றை தொடா்புகொள்ளலாம். 24 மணி நேரமும் பேரிடா்கால அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படும். மழை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்; மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com