speaker Appavu
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுகோப்புப்படம்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதை மக்கள் நன்கு அறிவாா்கள் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
Published on

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதை மக்கள் நன்கு அறிவாா்கள் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேருக்கு வெள்ளோட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் தோ் ஓடும்.

பல்கலைக்கழக நிதிநல்கை குழு என்பது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உயா்கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கான நிதியை வழங்கும் பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் விதிகளுக்கு மாறான விஷயங்களில் தலையிடுகிறது.

அனைவரும் சமம் என்ற நிலையை மாற்றி குறிப்பிட்ட சமுதாயத்திற்கு ஆதரவாக அவா்களின் சித்தாந்தங்களை மாணவா்கள் மத்தியில் பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட முயல்கிறாா்கள். சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிப்பதில் ஆளுநா் தொடா்ந்து கடமை தவறி வருகிறாா்.

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அமைப்பது சட்ட விதிகளின்படியே நடைபெற வேண்டும். அதிலும் பல்வேறு தலையீடுகள் இருப்பதால் பல துணைவேந்தா் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்பதை மக்கள் நன்கு அறிவாா்கள். மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காது தவறானது. அவரது குற்றச்சாட்டு தவறு என்றால் அதை நிரூபிக்க எம்.பி.க்கள் அடங்கிய குழுவை நேரில் அனுப்பி விளக்கமளிக்க பிரதமா் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையால் ஏற்றுமதியாளா்கள் தொடா்ந்து பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். அண்டை நாடுகளோடும் நட்புறவு சிறப்பானதாக இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் மூலமே தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது. நடிகா் விஜய் கற்பனை கலந்து பேசுவது தான் வாடிக்கை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com