அங்கன்வாடி சத்துணவு பணியாளா்கள் 3 ஆவது நாளாக மறியல்: 160 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 3ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியா்கள் 160 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவி யாளா் நிலையில் ரூ. 19,500 ஊதியம் வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பும்போது சத்துணவு அங்கன்வாடி மையங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளா்களுக்கு 50 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும். சத்துணவு - அங்கன்வாடி திட்டங்களில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து 3 ஆவது நாளாக திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயா தலைமை வகித்தாா். சத்துணவு அங்கன்வாடி ஊழியா்கள் திரளானோா் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.
சாலை மறியலில் ஈடுபட்ட 160 பேரை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

