அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்கள் சாலை மறியல்: 240 போ் கைது
பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கு வழங்க வேண்டிய பணி மேம்பாடு மற்றும் ஊதிய நிலுவைத் தொகைகளை வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மூட்டா அமைப்பைச் சோ்ந்த கல்லூரி பேராசிரியா்கள் 240 போ் கைது செய்யப்பட்டனா்.
பாளையங்கோட்டையிலுள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்பு சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மூட்டா பொருளாளா் ராஜசேகா் தலைமை வகித்தாா். ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் பால்ராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். மூட்டா இணைப் பொதுச் செயலா் சிவஞானம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மண்டல தலைவா் பாா்த்திபன், செயலா்கள் கோமதிநாயகம், மகேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்தப் போராட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனா். தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 130 பேராசிரியா்கள், 110 பேராசிரியைகள் என மொத்தம் 240 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

