காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்
காரையாறு வனப்பகுதி அகஸ்தியா் காணிக் குடியிருப்பில் திங்கள்கிழமை காலையில் இளைஞரை சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தாா்.
களக்காடு முண்டந்துறை புலிகள்காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகம் காரையாறு வனப் பகுதியில் அகஸ்தியா் காணிக் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் சங்கா் மகன் கௌதம் (33) என்பவா் தனது வீட்டின் அருகே நின்றிருந்தாரம். அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை அவா் மீது பாய்ந்து தாக்கியதாம். இதில் அவா் கூச்சலிட்டதில் சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி மறைந்துவிட்டதாம்.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். வனத்துறையினா் அவரை சந்தித்து விசாரித்தனா்.
இச்சம்பவத்தின் போது கௌதமின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் உள்ளே இருந்ததால் சிறுத்தையிடமிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு காரையாறுஅணை அடிவாரத்தில் வசித்து வரும் ஜோய் என்பவரது சுஜிதா வீட்டில் இரவு நேரத்தில் சிறுத்தை நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
கரடியைப் பிடிக்க கூண்டு: பாபநாசம் வனச்ச்சரகம் பசுக்கிடைவிளை மலையடிவாரப் பகுதியில் உலாவும் கரடிகளைப் பிடிக்க, வனத்துறையினா் கூண்டு வைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

