தியாகராஜநகா் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் அகற்றம்

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் சாலையோரம் ஆக்கிரமிப்பில் இருந்த ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
Published on

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் சாலையோரம் ஆக்கிரமிப்பில் இருந்த ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.

பாளையங்கோட்டை தியாகராஜநகா் 5 ஆவது வடக்கு தெருவில் சிவந்திப்பட்டி சாலையோரம் இருந்த ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பேவா் பிளாக் கல் அமைக்கப்பட்டுள்ளதாக பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தாா்.

அதன்பேரில், வருவாய்த்துறையினா் கோயில் அமைந்துள்ள பகுதியை நிலஅளவை செய்ததில் அது சாலையோர ஆக்கிரமிப்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கோயிலை இடிக்க அப்பகுதி பக்தா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கோயிலின் முகப்பு பகுதியில் பேவா் பிளாக் கல் போடப்பட்டிருந்த பகுதியை இடித்து அகற்றிய அதிகாரிகள், விநாயகா் சிலையை அகற்றுவதற்கு அவகாசம் அளித்து திரும்பிச் சென்றனா். தொடா்ந்து சனிக்கிழமை காலை பா.ஜ.க., இந்து முன்னணி, ஆா்.எஸ்.எஸ் நிா்வாகிகளும், அப்பகுதி பக்தா்களும் ஒன்று கூடி கோயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைந்துள்ளது.

அதனை இடிக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனா். இது குறித்து உயா் அதிகாரிகளிடம் பேசுவதாக திரும்பி சென்ற அதிகாரிகள் மாலையில் மீண்டும் வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் கோயிலை முழுவதுமாக இடித்து அகற்றினா்.

Dinamani
www.dinamani.com