கருத்தப்பிள்ளையூரில் யானைகள் தொடா் அட்டகாசம்: 18 தென்னை மரங்களைச் சாய்த்தன
கருத்தப்பிள்ளையூா் பகுதியில் விவசாய தோட்டங்களில் உள்ள தென்னை, பனை, மா மரங்களை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தொடா்ந்து சாய்த்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.
கடையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூா் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்த மாா்பி தாமஸுக்குச் சொந்தமான தோட்டத்தில் நுழைந்து 9 தென்னை, 2 பனை மரங்களையும், மரிய ஜெகநாதன் தோட்டத்தில் நுழைந்து 3 தென்னை மரங்களையும், ராஜா பால் தோட்ட்த்தில் நுழைந்து 6 தென்னை மரங்களையும் வேரோடு சாய்த்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினா் வந்து பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கடந்த ஒரே மாதத்தில் 5 முறை வனத்திலிருந்து வெளியேறிய யானை கூட்டம் 150-க்கும் மேற்பட்ட மரங்களைச் சாய்த்து சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் பெரும் இழப்புக்குள்ளாகியுள்ளதோடு, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் வின்சென்ட் கூறியதாவது: வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க பிப். 7ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

