நாகர்கோவில், ஏப். 13: சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஒருங்கிணைந்த ரயில்வே கோட்டங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் எஸ். ஜெயகர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப் பணிகளில் சேர தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் இம் மாதம் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகலாம். மேலும், முன்னாள் படைவீரர்கள் தங்கள் ஆவணக் காப்பகம் மூலமாக குடும்பத்தினர்களான மனைவி, குழந்தையின் பெயர், பிறப்பு, திருமணம், மறுமணம், விவாகரத்து போன்ற நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கான காலஅவகாசம் வரும் 31.8.09 வரை நீட்டித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பதிவு செய்யாமலிருக்கும் முன்னாள் படை வீரர்கள், மேலும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.