குமரி மாவட்ட எழுத்தாளர் குமார செல்வாவிற்கு நிகழாண்டிற்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது கிடைத்துள்ளது.
திருச்சி மணப்பாறையை மையமாகக் கொண்டு செயல்படும் செந்தமிழ் அறக்கட்டளை மற்றும் மணவை தமிழ்மன்றம் ஆகியவை இணைந்து வருடம் தோறும் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகின்றன. மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக அவரது குடும்பத்தினர் இதனை செய்து வருகின்றனர். நிகழாண்டிற்கான விருது குமரி எழுத்தாளர் குமார செல்வாவிற்கு கிடைத்துள்ளது. இவர் எழுதிய "குன்னிமுத்து" நாவலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது.
சென்னை தியாகராஜர் நகரிலுள்ள ஆந்திர சமூக மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் சௌமா. ராசரத்தினம் தலைமை வகித்தார். ஜெயந்தன் மகன் சீராளன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் தமிழ் மணவாளர் விருது பெறுபவருக்கான தகுதியுரையை வாசித்தார். கவிஞர் இளம்பிறை, ஓவியர் டிராஸ்கிமருது, ஆகியோர் வாழ்த்துரை வங்கினர், நடிகரும், இயக்குனருமான ரா. பார்த்திபன், சிறப்புரை நிகழ்த்தினார். நாகலட்சுமி முன்னிலையில் எழுத்தாளர் பிரபஞ்சன், குமார செல்வாவிற்கு விருது வழங்கினார். விழாவில் இலக்கியவாதிகள் பலர் பங்கேற்றனர்.
எழுத்தாளர் குமார செல்வா குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர். இவர் சிறுகதைகள், நாவல்கள் பல எழுதியுள்ளார். இவரது கதைகள் பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இவர் அண்மையில் எழுதி வெளியிட்ட "குன்னிமுத்து" நாவல் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டார மொழி நடையைக் கொண்டு எழுதப்பட்டது. இந்நாவலில் இருளி என்ற பெண் கதாபாத்திரத்தின் துயரம் மிகுந்த வாழ்வையும், குமரி மாவட்ட மதம் சார்ந்த அரசியலையும் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது.
விருது பெற்ற எழுத்தாளர் குமார செல்வாவை, குமரி மாவட்டம் பைங்குளம் ஊராட்சித் தலைவர் சந்திரகுமார், பைங்குளம் நூலக வாசகர் வட்டத் தலைவர் முருகன், ஆசிரியர் ராமலட்சுமி உள்ளிட்டோர் நேரில் பாராட்டினர்.