கருங்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு காலை உணவு வழங்காததை கண்டித்து சனிக்கிழமை கிள்ளியூர் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸார் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கருங்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என நாள்தோறும் 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் இங்கு வரும் நோயாளிகளுக்கு முறையாக கிச்சை அளிக்கவில்லை எனவும்,மருத்துவமனை சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும் கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை கருங்கல் அரசு மருத்துமனைக்கு நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டு, மருத்துவ அலுவலர் சதீஸ்சிடம் குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுறுத்திவிட்டுச் சென்றாராம். இந்நிலையில் சனிக்கிழமை உள்நோயாளிகள் பிரிவில் உள்ள 13 பேருக்கு காலை உணவுக்காக பால் மற்றும் பிரட் வழங்கவில்லை என நோயாளிகள் எம்.எல்.ஏ விடம் புகார் தெரிவித்தனராம். உடனே எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு சென்று விளக்கம் கேட்டதற்குமுறையாக பதில்தெரிவிக்கவில்லையாம். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த கிள்ளியூர் பகுதி காங்கிரஸ் கட்சியினர் மருத்துவமனைக்கு திரண்டு வந்து எம்.எல்.ஏ.வுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருங்கல் காவல் ஆய்வாளர் சிவசங்கரன், மருத்துவ அலுவலர் சதீஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். காலை 10.30 க்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.