நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகர்கோவில் சேது இலக்குமிபாய் (எஸ்.எல்.பி.) அரசு மேல்நிலைப் பள்ளியில் 1987முதல் 1994 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களால் எஸ்.எல்.பி. நண்பர்கள் என்னும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் இப்பள்ளியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அமைப்பின் அறங்காவலர் சூரியமூர்த்தி, இணை அறங்காவலர் உமா கணேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலாவிடம் ஒப்படைத்தனர். சுகாதார வளாகத்தில் இடம் பெறுவதற்காக மாணவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு வாசக போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் விஜயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.