டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கிராமிய கலை நிகழ்ச்சியை, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
மாவட்ட நிர்வாகம், மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை, நகராட்சி நிர்வாகம், நாகர்கோவில் கிரேட்டர் ரோட்டரி சங்கம், மாவட்ட கிராமிய இசை கலைஞர்கள் மற்றும் பொதுநல சங்கம் ஆகியோர் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை, டெங்கு கொசு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். பின்னர், டெங்கு கொசு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை, பேருந்துகளில் ஒட்டினார்.
நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மதுசூதனன், நாகர்கோவில் நகராட்சி சுகாதார அலுவலர் வினோத்ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கிராமிய கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.