மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தில் சம உரிமைகள் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவிலில் விழிப்புணர்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி சென்று நிறைவடைந்தது.
இப்பேரணியில், கார்மல் மேல்நிலைப் பள்ளி, லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி, டி.வி.டி. மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகளும், சாந்திநிலையம், ஒய்யாசீஸ், நாஞ்சில் ஒய்யாசீஸ், அவிலா உள்ளிட்ட சிறப்பு பள்ளிகளிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலா, மாவட்ட மாற்றுத்திறானாளி நல அலுவலர் பிரம்மநாயகம், உதவி திட்ட அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) வில்வம் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.