முப்பந்தல் அருகே வாகனம் மோதி மிளா சாவு
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி முப்பந்தல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மிளா இறந்தது.
ஆரல்வாய்மொழியில் உள்ள வடக்கு மலையில் மிளா, சிறுத்தை, புலி, காட்டுப்பன்றி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குகள் உள்ளன. இவை, நாகர்கோவில் - காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் முப்பந்தல் அருகே அடிக்கடி சாலையைக் கடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கும், அச்சத்துக்கும் உள்ளாகியுள்ளனர். சில நேரங்களில் வாகனங்கள் மோதி வன விலங்குகள் இறப்பதும் நிகழ்கிறது. இந்நிலையில், முப்பந்தல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மிளா அடிபட்டு கிடப்பதாக வனதுறைக்கு தகவல் கிடைத்தது. பூதப்பாண்டி வனச் சரகர் வெங்கடாசலபூபதி உத்தரவின்பேரில் ஆரல்வாய்மொழி வனவர் பிரவீன் தலைமையில், வனக் காப்பாளர்கள் சண்முகம், அய்யப்பன், அசோக் ஆகியோர் சென்று பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி மிளா இறந்துகிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவர் மூலம் மிளா பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆரல்வாய்மொழி வன அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டது.