சிமென்ட் கலவை, தார் ஆலைக்கு எதிர்ப்பு: வேர்கிளம்பியில் கையெழுத்து இயக்கம்
வேர்கிளம்பியில் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேட்டையும், சுற்றுசூழல் பாதிப்பையும் ஏற்படுத்துவதாகக் கூறி, அங்குள்ள சிமென்ட் கலவை மற்றும் தார் தொழிற்சாலைக்கு எதிராக கையெழுத்து பிரசார இயக்கம் நடைபெற்றது.
வேர்கிளம்பி சந்திப்பில் போராட்டக் குழு சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்க பிரசாரத்தை, பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோதங்கராஜ் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் செயலரும், போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகருமான வழக்குரைஞர் பா.ஜாண் இக்னேசியஸ் முன்னிலை வகித்தார். போராட்டக்குழுத் தலைவர் கிறிஸ்துதாஸ், செயலர் முகம்மது அப்சல், பொருளாளர் இ.சோபி, பாப்புலர் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டச் செயலர் எஸ்.ஷேக் நூர்தீன், தேமுதிக மாவட்டச் செயலர் ஜெகநாதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர்ஹூசைன், அதிமுக வேர்கிளம்பி பேரூர் செயலர் எஸ்.ஜெபசிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வேர்கிளம்பி 14ஆவது வார்டில் காரிய மங்கலத்துவிளை, கோணத்துவிளை, வேர்கிளம்பி, மல்லன்விளை ஆகிய பகுதிகளில் 2500 குடியிருப்புகள் உள்ளன. இங்கு சிமென்ட் கலவை மற்றும் தார் ஆலை அமைந்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், ம க்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கையெழுத்து இயக்கம் நடத்துவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.