சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியின் 20ஆவது ஆண்டு விழா பிப். 13இல் தொடங்கி 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நிகழ்வாக ரூ . 60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மற்றும் கூடைப்பந்து மைதானம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் மரியவில்லியம் தலைமை வகித்தார். குருகுல முதல்வர் மரிய அல்போன்ஸ் விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்தார். கல்லூரி நிதி காப்பாளர் பென்சிகர் வாழ்த்திப் பேசினார். முன்னாள் மாவட்ட இளைஞர்- விளையாட்டுத் துறை அலுவலர் பால் சுந்தரதாஸ் விளையாட்டு விழாவை தொடங்கிவைத்தார்.
இரண்டாம் நாளான புதன்கிழமை பல்வேறு துறைகள் சார்பாக கண்காட்சிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை ஹெக்ஸா வயர் நிறுவன தொழில்நுட்ப துணைத் தலைவரும், மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவருமான ஸ்டேன்லி ஜார்ஜ் பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து கலைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளிள் வெற்றி பெற்றவர்களுக்கு அருள்பணியாளர்கள் வைஸ்லின் சேவியர், தேவதாஸ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். வியாழக்கிழமை நடைபெறும் ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவரும், குழித்துறை மறைமாவட்ட ஆயருமான ஜெரேம்தாஸ் தலைமை உரையாற்றுகிறார். கல்லூரித் தாளாளர், நிதிகாப்பாளர், கல்லூரி முதல்வர் ஜோசப் சேகர் ஆகியோர் பங்கேற்கின்றனர். பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, நாம் குமரி மக்கள் அமைப்பின் தலைவர் தேவசகாயம் பரிசுகள் வழங்குகிறார்.