நாகர்கோவில் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற 8 ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர், கோட்டாறில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர் நாகராஜன் (28), வியாழக்கிழமை பிற்பகலில் மாணவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். அப்போது மாணவர் கூச்சலிடவே, இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என, ஆசிரியர் கொலை மிரட்டல் விடுத்து மாணவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம். இதுகுறித்து, மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர், தனது பெற்றோருடன் கோட்டாறு போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ், ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் விசாரிக்க மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாத் உத்தரவிட்டதையடுத்து, போலீஸார் ஆசிரியர் நாகராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.