கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சுனாமிப் பூங்கா சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட ஆழிப்பேரலை தாக்கியதில் குமரி மாவட்டத்தில் 850-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை நினைவுகூரும் வகையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சுனாமி நினைவுப் பூங்கா ரூ. 50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இப்பூங்காவை கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பூங்காவைச் சுற்றிலும் அழகிய புல்தரைகள், நவீன இருக்கைகள், அலங்கார மின்விளக்குகள் ஆகியவை உருவாக்கப்பட்டன. பூங்காவின் நடுப்பகுதியில் சுனாமி நினைவு ஸ்தூபி ஒன்றும் நிறுவப்பட்டது. அண்மை காலமாக இந்த பூங்காவிலுள்ள மின்விளக்குகள் உடைந்தும், இரும்பாலான பொருள்கள் துருப்பிடித்தும் பராமரிப்பற்று மிகவும் மோசமான நிலையில் அலங்கோலமாக காணப்படுகிறது. இந்நிலையில் கடந்தசில நாள்களுக்கு முன் பூங்காவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, சுனாமி நினைவு தினமான டிசம்பர் 26 ஆம் தேதிக்குள் பூங்காவை சீரமைக்க வேண்டுமென உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவின் பேரில் துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் மாற்றப்பட்டு பூங்காவை அழகுபடுத்தும் முயற்சியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.