விழிப்புணர்வு மூலம் தற்கொலைகளை தடுக்கலாம் என்றார் பொது அறுவை சிகிச்சை நிபுணர் ராமசுப்பு.
உலக மன நல தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அருகே நாவல்காட்டில் அமைந்துள்ள ஜேம்ஸ் பொறியியல் கல்லூரியில் மாறும் உலகில் இளைஞர்கள் மற்றும் மன ஆரோக்கியம் என்ற தலைப்பில் மனநலதினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமை வகித்தார். விழாவில் பொது அறுவை சிகிச்சை நிபுணர் ராமசுப்பு பேசியது:
தற்கொலை முயற்சி என்பது ஒருவித மனநல பிரச்னை. இதில் கடந்த10 ஆண்டுகளில் 80 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களில் 12.2 லட்சம் பேரும், பெண்களில் 9.1 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகமாக 15 முதல் 29 வயதிற்கு உள்பட்டவர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் மனஅழுத்தம், மனநிலை வெகு நாள்களாக பாதிப்பு, குடும்ப சூழ்நிலை, உடல்ரீதியான பாதிப்பு, தனிமைப்படுத்துதல், இழிவு படுத்துதல், செல்லிடப்பேசியில் விபரீத விளையாட்டுகள் ஆகியவை ஆகும். மேற்கூறியவைகளால் பாதிக்கப்பட்டவர்களின் தற்கொலை எண்ணத்தை தடுக்க குழுக்கள் அமைத்து செயல்படுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக சேவையில் ஈடுபடுத்துதல், வேலை வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகியவைகளை செய்யலாம். மேலும் தற்கொலை முயற்சி எண்ணம் கொண்டவர்களை அறிகுறி மற்றும் அடையாளம் கண்டு மருத்துவமேலாண்மை அளித்து தடுக்கலாம் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் செவிலியர் பயிற்சி ஆசிரியைகள், மாணவர், மாணவிகள் மற்றும் பொறியியல் கல்லூரிதுறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.