கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைப்பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இது குறித்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் முத்துடையார், தொழில்நுட்ப மேலாளர் பி.பிரதீப் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் சாலை, தரை வழிப்போக்குவரத்து அமைச்சகம் மூலம் கேரள- தமிழக எல்லை முதல் கன்னியாகுமரி வரை, நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரையிலான புதிய நான்கு வழிச்சாலைப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
36 குழாய் பாலம் (Pipe Culvert) பணிகள் முடிவடைந்து 35 குழாய் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.
33 சதுரபாலம் அமைக்கும் பணிகள் (Box Culvert) முடிவுபெற்றும், 35 சதுர பாலப்பணிகள் தற்போது நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது.
13 வாகன கீழ் பாதை (Vehicular Underpass) பணிகள் முடிவுற்றுள்ளது. 9 பாதசாரிகள் கீழ்பாதை பணிகள் (Pedestrian Underpass) நிறைவு பெற்று மீதி பணிகளும் நடைபெற்று வருகின்றன. 5 சிறிய பாலங்கள் கட்டும் பணிகள்நிறைவு பெற்றும், 8 பாலப் பணிகள் நடைபெற்றும் வருகின்றன. மேலும் 2 ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது, மேலும் காவல்கிணறு முதல் தோவாளை மண்டல போக்குவரத்து அலுவலர் அலுவலகம் வரை சுமார் 14 கி.மீ. கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக தயார் நிலையில் உள்ளது.
கன்னியாகுமரி முதல் வழுக்கம்பாறை வரை சுமார் 6 கி.மீ. சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. நான்கு வழிச்சாலை பணிகள் 24 மணி நேரமும் இரவு பகலாக துரிதமாக நடைபெற்று வருகிறது. 2 ரயில்வே மேம்பாலங்களும், தாமிரவருணி ஆற்றுப்பாலம் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகின்றன.
தாமிரவருணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையிலும், மழை காரணமாக குளங்களில் நீர் நிரம்பி மண் எடுக்க முடியாததாலும் சில வேலைகளில் தாமதம் ஏற்படும்.மேலும் மண் சரிவு ஏற்படும் இடங்களில் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தத்தில் சாலைப் பணிகள் 60 சதவீதத்துக்கு மேல் நிறைவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.