அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டவரை அரிவாளால் வெட்டிய 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
பிரம்மதேசம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி மகன் இசக்கிப்பாண்டி (52). அதே பகுதியைச் சேர்ந்தவர் தளவாய் மகன் கார்த்திக் (23). பிரம்மதேசம் பகுதியில் பொது இடத்தில் கார்த்திக் மது அருந்தினாராம். இதை பார்த்த இசக்கிப்பாண்டி, கார்த்திக்கை கண்டித்ததோடு போலீஸாரிடம் கூறுவதாகச் சொன்னாராம்.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்கள் அம்பாசமுத்திரம் கோவில்குளத்தைச் சேர்ந்த சிவனுப்பாண்டி மகன் மாரியப்பன் (20), சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் சுதீஷ் ஆகியோருடன் சேர்ந்து பிரம்மதேசத்தில் இசக்கிப்பாண்டியை அரிவாளால் வெட்டினராம்.
இதில் பலத்த காயமடைந்த இசக்கிப்பாண்டியை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து இசக்கிப்பாண்டி அளித்த புகாரின் பேரில், மாரியப்பன், சுதீஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய கார்த்திக்கை தேடிவருகின்றனர்.