பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, நாகர்கோவிலில் காங்கிரஸார் புதன்கிழமை கண்டனப் பேரணி நடத்துகின்றனர்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கிளை நிர்வாகிகள் கூட்டம் மார்த்தாண்டம் சாங்கை பகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜே.ஜி. பிரின்ஸ் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலச் செயலர் வல்சலம் சிறப்புரையாற்றினார். கட்சியின் ஆய்வுத் துறை மாநில ஒருங்கிணைப்பாளர் சி. ஆண்டனி விஜிலெஸ், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்துப் பேசினார்.
கூட்டத்தில், "ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கண்டனம் தெரிவித்து, நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை புதன்கிழமை (செப். 12) நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் திரளானோர் பங்கேற்பது; பூத், வார்டு கமிட்டிகள் அமைத்து கட்சிப் பணியை துரிதப்படுத்துவது; புதிய உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்வது' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.