மார்த்தாண்டம் அருகே மின்வாரிய ஊழியரை பணிசெய்ய விடாமல், தடுத்தவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
கொல்லங்கோடு அருகேயுள்ள அடைக்காகுழி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார் (45). குழித்துறை மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி பகுதி வீடுகளில் மின்சாரப் பயன்பாடு குறித்து அளவீடு செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஆல்பர்ட்ராஜ் (45) என்பவரின் வீட்டில் மின் அளவீடு செய்தபோது, அங்கு வந்த ஆல்பர்ட்ராஜ், மோகன்குமாரிடம் தகராறு செய்து அவரை மிரட்டினாராம்.
இதுகுறித்து மோகன்குமார் அளித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் போலீஸார், மின்வாரிய ஊழியரை பணியாற்றவிடாமல் தடுத்ததாக, ஆல்பர்ட்ராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.