கட்செவி அஞ்சல் (வாட்ஸ்ஆப்) மூலம் பெண்ணிடம் அநாகரிகமான முறையில் பேசியதாக காவல் துறை ஆய்வாளர் மீது மகளிர் போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம், கருங்கல் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் பென்சாம். இவர் ஒரு பெண்ணிடம் கட்செவி அஞ்சல் விடியோ அழைப்பு மூலம் ஆபாசமாக பேசிய காட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப்பில் பரவியது. இதுகுறித்து ஆய்வாளர் மீது காவல் துறை உயர்அதிகாரிகள் துறைரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்தனர்.
இந்நிலையில், ஆய்வாளர் பென்சாம் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்தப் பெண் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆய்வாளர் பென்சாம் மீது நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதன்படி, ஆய்வாளர் பென்சாம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354(ஏ) (டி) பெண்ணை மானபங்கப்படுத்தும் விதத்தில் பேசுதல், 506(1) கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 4 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.