நாகர்கோவில் அரசுப் பொறியியல் கல்லூரியில் கணினி உதிரிபாகங்கள் திருட்டு தொடர்பாக ஊழியரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே கோணம் பகுதியில் அரசுப் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக 400-க்கும் மேற்பட்ட கணினிகள் உள்ளன. இந்நிலையில், இங்கு இருந்த கணினிகள் திடீரென பழுதடைந்தன. 50-க்கும் மேற்பட்ட கணினிகள் ஒரே நேரத்தில் பழுதடைந்ததால் சந்தேகமடைந்த கல்லூரி நிர்வாகம், இதுகுறித்து விசாரணை நடத்தியது. அதில் கணினிகளில் இருந்த உதிரிபாகங்கள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்பனராக பணிபுரியும் தற்காலிக ஊழியர் கிஷோர் பாபு (37) மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கணினி உதிரிபாகங்களைத் திருடி கேரள மாநிலத்தில் விற்றதும், அவற்றின் மதிப்பு ரூ. 8 லட்சம் இருக்கும் எனவும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.