நித்திரவிளை அருகே விநாயகர் சிலை உடைத்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நித்திரவிளை அருகே கோயிக்கத்தோப்பு பகுதியில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் 3 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வியாழக்கிழமை மாலையில் சிலைக்கு பூஜை நடத்தப்பட்டதாம்.
இரவில் சிலை அமைப்பு நிர்வாகிகள் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் முன்சிறை ஒன்றிய இந்துமுன்னணிச் செயலர் கென்னடி அங்கு நின்றிருந்தாராம். அப்போது கோயிக்கத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலையன் மகன் எட்மண்ட் (49), பால்மணி மகன் பெல்ஜின் பால் (29) ஆகியோர் அங்கு வந்து கென்னடியிடம், விநாயகர் சிலையை இங்கு எப்படி வைக்கலாம் எனக் கேட்டு தகராறு செய்தனராம். தொடர்ந்து அச் சிலையை அவர்கள் உடைத்து சேதப்படுத்தினராம். இது குறித்து தகவல் அறிந்து இந்து முன்னணி நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.
இது குறித்து கென்னடி அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை காவல் உதவி ஆய்வாளர் சோபனராஜ் வழக்குப் பதிந்து, எட்மண்ட், பெல்ஜின் பால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக மாற்றுச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.