சாத்தான்குளம் அருகே இருவருக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகன் கைது
சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னை காரணமாக விவசாயி உள்ளிட்ட இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தந்தை, மகனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள மேலபனைகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் தாமஸ் ஜெயசீலன் (44). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் பேய்க்குளம்-உடையாண்டி சாலையில் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோயில்பிச்சை மகன் செல்வினுக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளதாம். தற்போது தாமஸ் ஜெயசீலன் நிலத்தில் மாட்டு தீவனம் பயிரிட்டுள்ளாராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலையில் செல்வின் மற்றும் அவரது மகன்கள் ஏசுதாசன், டேனியல் ஆகிய 3 பேரும் சேர்ந்து, தாமஸ் ஜெயசீலன் நிலத்துக்குள் புகுந்து பயிர்களை டிராக்டரை கொண்டு சேதப்படுத்தினராம். இதை கண்டித்ததால் ஜெயசீலனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அப்போது தடுக்க முயன்ற தாமஸ் ஜெயசீலனின் சகோதரர் ஆரோக்கியராஜ் மகன் விஜய்அஸ்வினுக்கும் (26) வெட்டு விழுந்தது.
பலத்த காயமடைந்த தாமஸ் ஜெயசீலன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலும், விஜய்அஸ்வின் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வின், அவரது மகன் ஏசுதாசன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனர். தலைமறைவான டேனியலை தேடி வருகின்றனர்.