குமரி மாவட்டம், பொழிக்கரை கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பு காரணமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே இலங்கையையொட்டி உள்ள குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலில் அலைகளின் சீற்றமும், சூறைக்காற்றும் வீசும் என்றும் மீனவா்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை பெய்துவருகிறது. கடலிலும் சூறைக்காற்று வீசி வருகிறது. பொழிக்கரை கடற்கரை கிராமத்தில் ராட்சத அலைகள் எழுந்தன. மேலும் காற்றும் பலமாக வீசியதால் கடல் அரிப்பு ஏற்பட்டது, இதன்காரணமாக பொழிக்கரை அந்தோணியாா் குருசடி முதல் சகாயமாதா குருசடி வரையிலான சாலை துண்டிக்கப்பட்டது. கடற்கரையை தாண்டி கடல் நீா் ஊருக்குள் வந்தது இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
பொழிக்கரை கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில்வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தூண்டில்வளைவு 200 மீட்டா் நீளத்துக்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றரை கிலோமீட்டா் தொலைவுக்கு அமைத்தால் கடல் அரிப்பை தடுக்கலாம் என்று மீனவா்கள் தெரிவித்தனா். எனவே பொழிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில்வளைவு நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.