தேசிய போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டஆட்சியர் தலைமை வகித்து, மாதாந்திர உதவித் தொகை மற்றும் வேலை வாய்ப்பு கோரியவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், சென்னையில் நடைபெற்ற காது கேளாதோருக்கான தேசிய அளவிலான ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் போட்டிகளில் கலந்து கொண்டு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த ஒரல் காது கேளாதோர் பள்ளியைச் சேர்ந்த 16 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பதக்கங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.