கடல் ஆராய்ச்சி மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்: சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர்
கடல் ஆராய்ச்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றார் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர். ராஜாக்கமங்கலம் மத்திய கடல்வாழ் உயிரின ஆய்வு மையம் சார்பில் மரைன் பயோ டெக்னாலஜி குறித்த தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து அவர் பேசியது: இந்தியாவில் உள்ள 7,500 கி.மீ. நீளமுள்ள கடல்பரப்பையும், கடலையும் முழுமையாக ஆய்வு மேற்கொண்டால்தான் கடலுக்குள் இருக்கக்கூடிய பல பொக்கிஷங்களை வெளிகொண்டு வந்து பயனுள்ளதாக மாற்றமுடியும்.
ஜப்பான் போன்ற மேலைநாடுகளில் கடல்சார்ந்தே மக்கள் வாழ்வதால் உணவானாலும், மருந்தானாலும் கடல் பொருள்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். நம்நாட்டில் பயோடெக்னாலஜி வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் இன்னும் அதிகமாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் அறிவியல் சார்ந்த வேலைவாய்ப்புகளும், புதிய கண்டுபிடிப்புகளும் அதிகரிக்கும். இன்றைய சூழ்நிலையில் அறிவியல் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடியவர்கள் தான் நாட்டுக்குத் தேவை.
நம்நாட்டைப் பொறுத்தவரை பசுமைப் புரட்சியிலும், வெண்மைப் புரட்சியிலும் தன்னிறைவு அடைந்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உலகளவில் முன்னணி நாடாக உள்ளது. அடுத்ததாக கடல் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். இந்த முயற்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்பைவிட அதிகளவில் நிதியை ஒதுக்குகின்றன. மத்தியஅரசு மேக் இந்தியா திட்டத்தின் கீழ் புதிய கண்டுபிடிப்புகளுக்கு கடனுதவி வழங்கி ஊக்குவிக்கிறது என்றார் அவர்.
முன்னதாக மத்திய கடல்வாழ் உயிரின ஆய்வு மைய துறைத் தலைவர் சாமுவேல் ஞான பிரகாஷ் வரவேற்றார். கருத்தரங்கில் விஞ்ஞானிகள் லாசரஸ், சிற்றரசு, லிப்டன், பாண்டியன், மிக்கேல் பாபு உள்ளிட்ட பலர் பேசினர்.
இதில், நாடு முழுவதுமிருந்து 300-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.