சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 17 ஆவது பட்டமளிப்பு விழாவில் 455 மாணவர்களுக்கு சனிக்கிழமை பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு, குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங் சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுக உரை ஆற்றினார். தாளாளர் மரியவில்லியம் பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டு அலுவலர் துரைஅரசன் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், மாணவர்கள் தொழில்நுட்ப ஆற்றலை வளர்த்து கொள்ளவேண்டும். இன்றைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தாங்கள் கற்றறிந்த தொழில்நுட்பம் குறித்து திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பல்கலைக் கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 6 மாணவர்களுக்கு பதக்கங்களை குருகுலமுதல்வர் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், முதுநிலை, இளநிலை பொறியியல் பயின்ற 455 மாணவர், மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரியின் நிதி காப்பாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் மில்டன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.