லஞ்ச புகாரில் சிக்கிய குமரி மாவட்ட பேரூராட்சி உதவி செயற்பொறியாளரின் வங்கி லாக்கரிலிருந்து 250 பவுன் நகைகள், ரூ. 7.50 லட்சம் ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை இரவு கைப்பற்றினர்.
குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாடசாமி சுந்தர்ராஜ் (53) பணிபுரிந்து வருகிறார்.
இந்த அலுவலகத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீஸார், கடந்த 16ஆம் தேதி இரவு சோதனை நடத்தினர்.
அப்போது உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜிடம் இருந்து ரூ.4.07 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், பாளையங்கோட்டை பாரதி நகரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது 13 வங்கி கணக்கின் 2 லாக்கர்களில் சோதனையிட்டனர்.
அதிலிருந்து 250 பவுன் தங்க நகைகள், ரூ. 7.50 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றினர். மேலும் அரசு ஆசிரியராக பணிபுரியும் அவரது மனைவியின் வங்கி லாக்கருக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மாடசாமி சுந்தர்ராஜ், சுமார் ரூ. 2 கோடி வரை வட்டிக்கு பணம் கொடுத்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.