மார்த்தாண்டம் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திய வழக்கில் பொறியாளர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 10 ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இது குறித்து மார்த்தாண்டம் போலீஸில் மாணவியின் தந்தை புகார் தெரிவித்திருந்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி இளைஞர் மார்கஸ் மில்புசன் (21) கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் மார்கஸ் மில்புசன் மற்றும் அவருக்கு உதவி செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுபின் (19) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வந்தனர்.
இந்த வழக்கை தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் எபனேசர் தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் மாணவியை பெங்களூருவுக்கு கடத்திச் சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூருவுக்கு சென்று அந்த மாணவியை மீட்டு வந்தனர். மேலும் மாணவியை கடத்திச் சென்ற மார்கஸ் மில்புசன், சுபின் இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.