தென் மாவட்ட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான ஸ்கேட்டிங் போட்டியில், சுங்கான்கடை வின்ஸ் பள்ளி முதலிடம் பிடித்தது.
தக்ஷின் சகோதயா சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான ஸ்கேட்டிங் போட்டியை லீ ஸ்போர்ட்ஸ் அகாதெமி மைதானத்தில் நடத்தியது.
இதில் 12 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட பிரிவில், வின்ஸ் பள்ளியின் 8ஆவது வகுப்பு மாணவர் பபின்குமார், ரிங் 1 போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், ரிங் 2 போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
6 வயதுக்குள்பட்ட பிரிவில் இப்பள்ளி யுகேஜி மாணவர் பிபின், ரிங் 1, ரிங் 2 பிரிவு போட்டிகளில் 3ஆம் இடம் பெற்று 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
10- 12 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் 6ஆம் வகுப்பு மாணவி தீப்தி, ரிங் 1 பிரிவில் 2ஆவது இடமும், ரிங் 2 பிரிவில் 3ஆவது இடமும் பெற்று வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். மொத்தமாக இப்பள்ளி முதலிடம் பிடித்தது.
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் பரிசுகள் வழங்கினார். பள்ளிச் செயலர் கிளாரிசா வின்சென்ட் சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி முதல்வர் லதா, பயிற்சியாளர் குமார் ஜேசுராஜாவை பாராட்டினார்.