நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்திமங்கலம்-பூதப்பாண்டி செல்லும் தொண்டிக்கரை சாலை பகுதியில் புதிதாக
மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்காக வெள்ளிக்கிழமை இரவு லாரியில் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டதாம்.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை மதுக்கடை முன்பு திரண்டு, கடையை திறக்க ஆட்சேபம் தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக்கடை குறித்து அதிகாரிகள் உறுதி அளிக்காததால் பொதுமக்கள் ஈசாந்திமங்கலம்-நாகர்கோவில் பிரதானச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், புதிய மதுக்கடை திறக்கப்பட மாட்டாது என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.