கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், பெண் இறந்தார். இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், வடகடத்தூர் பகுதியைச் சேர்ந்த கிட்டுராஜ் மனைவி கார்த்திகா (25). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். அப்போது, அவருக்கும், அங்கு வேலைசெய்து வந்த நடுப்பாளையம், குருமந்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதையறிந்த கிட்டுராஜ், தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய சதீஸும், கார்த்திகாவும் 9ஆம் தேதி தேதி மதுரையில் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிகிறது. பின்னர், கன்னியாகுமரிக்கு செவ்வாய்க்கிழமை வந்த இருவரும் காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இதனிடையே, புதன்கிழமை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லையாம். இதில், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் போலீஸார், அறைக்கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்ததில், காதல் ஜோடி விஷம் அருந்தியது தெரியவந்தது. கார்த்திகா சடலமாகவும், சதீஸ் உயிருக்குப் போராடிய நிலையிலும் மீட்கப்பட்டனர். இதையடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சதீஷை அனுமதித்த போலீஸார், இருவரது வீட்டுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.