மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணியாற்றியவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், ரூ. 50 ஆயிரம் பரிசு, சான்று வழங்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்களுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப்பதக்கம், சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூகப் பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், சான்று, சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்று ஆகியவை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் இருந்து பெற்று வருகிற ஜூலை 5ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.