குழித்துறையில் 94ஆவது வாவுபலி பொருள்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. குழித்துறை தாமிரவருணி ஆற்றங்கரையோரம் வி.எல்.சி. மைதானத்தில் குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும், இப்பொருள்காட்சி தொடக்க விழாவுக்கு குழித்துறை நகராட்சி ஆணையர் (பொ) மூர்த்தி தலைமை வகித்தார். பத்மநாபபுரம் சார்-ஆட்சியர் சரண்யா அறி பொருள்காட்சித் திடலை திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார்.
இப்பொருள்காட்சியில் விவசாய விளை பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள், ராட்சத ராட்டினம், மேஜிக் உள்ளிட்ட பல்வேறு பக்க காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.