மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஜூன் 23ஆம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வுக் கூட்டம், நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் பியூஸ்பதி, மக்வானா ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நாள்களுக்குள் தங்கள் தேர்தல் செலவின கணக்கை, தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவின கணக்குகளை இம்மாதம் 23ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
அப்போது, தேர்தல் செலவின கணக்கை சமர்ப்பிக்கும் விதிமுறைகள் குறித்து தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை வழங்கினர். இதில், மாவட்ட கருவூல அலுவலர், உதவி செலவினப் பார்வையாளர்கள் கணக்கு குழுவினர், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கலந்துகொண்டனர்.