மார்த்தாண்டம் அருகே வாகனத்தில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 500 லிட்டர் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட வருவாய்த்துறை பறக்கும்படை தனி வட்டாட்சியர் அப்துல்லா மன்னன் தலைமையில் தனித் துணை வட்டாட்சியர் கே. முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், ஓட்டுநர் டேவிட் ஆகியோர் கொண்ட குழுவினர் கருங்கல் அருகே வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று இரவிபுதூர்கடை பகுதியில் வைத்து காரை மடக்கிப் பிடித்தனர்.
காரை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தொடர்ந்து வாகனத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 500 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவை மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் என்பதும், வாகனத்தில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.